சென்னை: ஓசூர் – கர்நாடக மாநிலம் பொம்ம சந்திரா இடையே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு தொடர்பாக ஆய்வு நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் ரூ.29.44 லட்சத்துக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்திக், திட்ட இயக்குநர் அர்ச்சுனன் முன்னிலையில், தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் பாலாஜி ரயில் ரோட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜான் ராஜ் குமார், ஹபோக் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோபால் குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “பொம்ம சந்திரா – ஓசூர் இடையே 20 கிமீ தூரத்துக்கு புதிய மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கை தயாரிக்கத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 8 கிமீ மற்றும் கர்நாடகாவில் 12 கிமீ என இரு மாநிலங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் இருக்கும். சாத்தியக் கூறு அறிக்கைக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்த பின்னர் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து திட்டம் செயல்படுத்தப்படும்" என்றனர்.