புதுடெல்லி: மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை மின்வாகனங்களாக மாற்ற மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுக்கலாம் என்று பிரிமஸ் பார்ட்னர் மற்றும் இடிபி ஆகிய இரு நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, 15 ஆண்டுகளைத் தாண்டும் வர்த்தக வாகனங்கள், 20 ஆண்டுகளைத் தாண்டும் பயணிகள் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். சுற்றுச்சூழல் தாக்கம்தொடர்பான அந்தப் பரிசோதனையில் தகுதிபெறாத வாகனங்கள் அழிக்கப்படும்.
இந்நிலையில், பழைய வாகனங்களை அழிப்பதற்குப் பதிலாக, அவற்றை மின்வாகனங்களாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்றும் இதற்கு மத்திய அரசு மானியம்வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றுவது சவால் மிகுந்ததுதான் என்றாலும், அரசின் முன்னெடுப்பு, வாகன நிறுவனங்களின் ஒருங்கிணைவு, மக்களின் ஒத்துழைப்பு வழியாக இந்தச் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.