வணிகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிப்பு பணி தீவிரம்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண் பானை மற்றும் அடுப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்பாண்டத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். வருவாய் இல்லை: இவர்கள் பெரும்பாலும் பொங்கல், தீபாவளி, கார்த்திகை தீபம் மற்றும் நவராத்திரி விழாவுக்குத் தேவையான மண்பாண்ட பொருட்களைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது, இத்தொழிலில் போதிய வருவாய் இல்லாததால், சிலர் மாற்றுத் தொழிலுக்கு மாறிவிட்டனர். இருப்பினும் சிலர் குலத்தொழிலைக் கைவிட மனமில்லாமல் பல்வேறு இடர்பாடுகளுக்கும் இடையில் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நிகழாண்டில் பொங்கல் பண்டிகைக்காக மண் பானைகள், அதன் மீது மூடப்படும் மூடிகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

களிமண், விறகு விலை உயர்வு: இது தொடர்பாக வேலம்பட்டி அருகே சென்றாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி கூறியதாவது: ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு இரு மாதங்களுக்கு முன்னரே பானைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம். நிகழாண்டில் பரவலாகப் பெய்த மழை மற்றும் வெயிலின் தாக்கம் குறைந்ததால் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 10 நாட்களாக ஓரளவுக்கு வெயில் உள்ளதால், பானைகளை தயாரித்து உலர வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும், களிமண், விறகு, ஆட்கள் கூலி உயர்ந்துள்ளதால், பானைகளின் விலை கடந்தாண்டை விட ரூ.100 அதிகரிக்கும். தமிழக அரசு மண்பாண்ட தொழிலுக்குத் தேவையான மண்வெட்டி, கடப்பாரை, சல்லடை உள்ளிட்ட உபகரணங்களை இலவசமாக வழங்கி இத்தொழிலை நலிவிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

பாரம்பரியம் காக்க: தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர் ) சங்கத்தினர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்கி வருகிறது. இதில், பொங்கல் பானை மற்றும் அடுப்பை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரிய முறையில் மண் பானையில் மக்கள் பொங்கல் வைக்கும் பழக்கம் ஏற்படும். மேலும், மண் பாண்டத் தொழில் அழிவிலிருந்து மீட்கப்படும். மேலும், இதை நம்பியுள்ள தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT