கோவை: தமிழ்நாட்டில் ஃபிளாட் பத்திரப்பதிவு செய்வதில் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோவை ‘கிரெடாய்’ தொழில் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ‘கிரெடாய்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பத்திரப் பதிவு செய்யும் முறையில் தமிழக அரசு டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்துள்ளது. இதுவரை அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பிரிக்கப்படாத பாக நில விற்பனைக்கு ஒரு பத்திரப் பதிவு, வாங்கும் ஃபிளாட்டின் கட்டுமான ஒப்பந்தத்துக்கு மற்றொரு பத்திரப்பதிவு என இரு பத்திரப்பதிவுகளை செய்து வந்தனர்.
புதிய பத்திரப்பதிவு முறையில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. புதிய முறையில் நிலத்துக்கும், கட்டுமான ஒப்பந்தத்துக்கும் சேர்த்து மொத்தமாக 7 சதவீதம் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் அபார்ட்மெண்டுகளுக்கு ஏரியா வாரியாக கைடுலைன் மதிப்பை அரசு நிர்ணயித்துள்ளது. இதனால் ஃபிளாட் வாங்குபவர்கள் பழைய முறையை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிக பதிவுக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது.
இதனால் கட்டுமானத் துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பாக கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து புதிய பத்திரப் பதிவு முறையை பின்பற்றுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்தார். மீண்டும் பழைய இரு பத்திர பதிவு முறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.