சென்னை: சணல் பொருட்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சணல் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், தேசிய சணல் வாரியம் நடத்தும், சணல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது. சணல் பொருட்கள் மேம்பாட்டுக்காக கண்காட்சி, சணல் வடிவமைப்பு போட்டி, வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பு, ஆடை அலங்காரப் போட்டி, கருத்தரங்கு, பயிலரங்கு போன்றவற்றை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தேசிய சணல் வாரியம் நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களான சணல் பொருட்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சணல் பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்கவும் சென்னையில் சணல் கண்காட்சி இன்று (13-ம் தேதி) தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை தமிழக அரசின் வேளாண் துறை ஆணையர் டாக்டர் எல். சுப்ரமணியன் தொடங்கி வைக்கிறார். தேசிய சணல் வாரியம் ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியில் வாழ்க்கை முறைக்கு உகந்த மற்றும் அலங்கார சணல் பொருட்கள் இடம்பெறுகின்றன.