புதுடெல்லி: உலகின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இத்தாலியைச் சேர்ந்த கிளமென்ட் டெல் வெக்சியோ இடம் பிடித்துள்ளார்.
சர்வதேச அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இத்தாலியைச் சேர்ந்த கிளமென்ட் டெல் வெக்சியோ (19) அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி உற்பத்தி நிறுவனமான இத்தாலியைச் சேர்ந்த எஸ்ஸிலோர் லுக்சோட்டிகாவின் முன்னாள் தலைவர் லியோனார்டோ டெல் வெக்சியோ. இவருடைய மகன்தான் கிளமென்ட். லியோனார்டோ கடந்த ஆண்டு ஜூன் மாதம் 87-வது வயதில் காலமானார். இதையடுத்து, அவருடைய ரூ.2.12 லட்சம் கோடி சொத்தை மனைவி மற்றும் கிளமென்ட் உள்ளிட்ட 6 பிள்ளைகள் பிரித்துக் கொண்டனர். இதன்மூலம் கிளமென்ட் உலகின் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
கிளமென்டின் இப்போதைய சொத்து மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடியாக உள்ளது. இவ்வளவு பரம்பரை சொத்து இருந்தபோதிலும், கிளமென்ட் படிப்பில் கவனம் செலுத்துகிறார். அறிவியல், தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கல்லூரிக்குச் சென்று இந்தத் துறைகளில் வாழ்க்கையைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்.