வணிகம்

மிளகாய் வத்தல் ஏற்றுமதியில் சாதனை படைத்த கமுதி விவசாயிக்கு விருது

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: வெளி நாடுகளுக்கு மிளகாய் வத்தல் ஏற்றுமதி செய்து சாதனை படைத்த கமுதி பகுதி இயற்கை விவசாயி ராமருக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ராமர் (49). இவர் தனக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்த்து, இயற்கை விவசாய முறையில் மிளகாய் சாகுபடி செய்து, ஆண்டு தோறும் வெளி நாடுகளுக்கு மிளகாய் வத்தலை ஏற்றுமதி செய்து வருகிறார். கடந்தாண்டு ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது.

தமிழக அரசும், ராமநாதபுரம் மாவட்டத்தை மிளகாய் மண்டலமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு வெளி நாடுகளுக்கு அதிக அளவில் மிளகாய் வத்தல் ஏற்றுமதி செய்ததில், சஸ் அக்ரி டெவலப் மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில், இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக இயற்கை விவசாயி ராமருக்கு, ‘சஸ் அக்ரி டெவலப் மென்ட்' விருது, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வழங்கி பாராட்டினார்.

மேலும், பாக்குவெட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி உருவாட்டிக்கு, விவசாய ஒருங்கிணைப்பாளர் விருதும் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ் கோடி (வேளாண்மை), வேளாண் அறிவியல் மையப் பொறுப்பாளர் ராம் குமார் மற்றும் தோட்டக் கலை, வேளாண்மைத் துறை அதிகாரிகள், சஸ் அக்ரி டெவலப் மென்ட் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT