சென்னை: வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101.50 அதிகரித்து ரூ.1,999.50-க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயிக்கின்றன. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதை அடுத்து, கச்சா எண்ணெய் விலைஅதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்தது. பின்னர், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. இதையடுத்து, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறையத் தொடங்கின.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ்தீவிரவாதிகள் இடையே நடந்துவரும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
அதே நேரம், வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதன்படி, 19 கிலோ எடை உள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.101.50 அதிகரித்துள்ளது. இதனால், அதன் விலை ரூ.1,898-ல் இருந்து ரூ.1,999.50 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வர்த்தகபயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், இனிப்பு பலகாரங்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதேபோல, உணவகங்களிலும் உணவு பொருட்கள் விலைஅதிகரிக்கக்கூடும் என பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.