திருச்சி: திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், 2024-ம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்க அக்.31-ம் தேதி கடைசி நாள் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திருச்சி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சி.மாலதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், 2024-ம் ஆண்டுக்கான உரிமத்தை அக்.31-ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இதற்கென தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை.
http://dish.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உரிய கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் 15 ஆண்டுகள் வரை உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், உரிமம் திருத்தம், உரிமம் மாற்றம் ஆகியவற்றுக்கு இணைய வழி மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கென படிவம் 2 மற்றும் தகுந்த சான்று ஆவணங்களுடன் திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்துக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இதேபோல, ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் இணைய வழி மூலம் உரிய கட்டணம் செலுத்தி தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.
அக்.31-ம் தேதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தாமதக் கட்டணம் பொருந்தும். இணையத்தில் சமர்ப்பித்து உரிமம் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டியிருப்பதால் கடைசி நேர நெருக்கடி மற்றும் இணைய வழி சிக்கல்களைத் தவிர்க்க, முன்னதாகவே விண்ணப்பித்து பயன்பெறலாம்.