மும்பை: எம்ஆர்எஃப் நிறுவனத்தின் ஒருபங்கின் விலை நேற்று ரூ.1 லட்சத்தைத் தொட்டது. இந்திய பங்குச் சந்தையில், ஒரு நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1 லட்சத்தைத் தொடுவது இதுவே முதல்முறை ஆகும்.
1946-ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட எம்ஆர்எஃப் நிறுவனம், வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் அதிக பங்கு விலையைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் எம்ஆர்எஃப் முதல் இடத்தில் உள்ளது. நேற்றைய தினம் இந்நிறுவனத்தின் பங்கு விலை 1.37 சதவீதம் உயர்ந்து ரூ.1,00,300-க்கு வர்த்தகமானது.
அதிக பங்கு விலையைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் ஹனிவெல் ஆட்டோமேஷன் (ரூ.41,000) 2-வது இடத்திலும், பேக் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.38,133) 3-வது இடத்திலும் உள்ளன.
நேற்றைய தினம் சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 63,143 ஆகவும், நிஃப்டி 114 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 18,716 ஆகவும் நிலைகொண்டன.