ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் உடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 
வணிகம்

ரூ.42,500 கோடி மதிப்பில் 6 நீர் மூழ்கிக் கப்பல்களை உருவாக்க ஜெர்மனியுடன் பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா அதன் கடற்படையை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக்கு தேவையான 6 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு 5.2 பில்லியன் டாலர் (ரூ.42,500 கோடி) மதிப்பில் ஜெர்மனியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்ய உள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ள ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.

சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிற நிலையில், இந்தியா தன்னுடைய ராணுவக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய கடற்படையைப் பொருத்தவரையில், 24 நீர்மூழ்கிக் கப்பல்கள் தேவைப்படுகின்றன. ஆனால், தற்போது 16 கப்பல்களே உள்ளன. இவற்றில் 10 கப்பல்கள் மிகப் பழமையானவை. கடற்படையை நவீனப்படுத்தி விரிவாக்க வேண்டிய சூழலில் இந்தியா உள்ளது. இந்நிலையில், 5.2 பில்லியன் டாலர் மதிப்பில் நவீனரக நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க ஜெர்மனியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பான முதற்கட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டில் தயாரிப்பு

இந்த ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில், இந்திய பொதுத் துறை நிறுவனமான மசாகன் கப்பல்கட்டும் நிறுவனமும் ஜெர்மனியின் தைசென்க்ரூப் நிறுவனமும் இணைந்து இந்தியாவிலேயே 6 நீர் மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிற நிலையில், ரஷ்யாவுடன் தொடர்ந்து ராணுவத் தளவாட ஒப்பந்தம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளிலிருந்து தளவாடங்கள் வாங்கும் வாய்ப்பை இந்தியா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT