கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

தமிழக மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு உடனடியாக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

"வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது!

கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 55 மீனவர்கள் அண்மையில் தான் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் 43 பேரை கரோனா நோயால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் இன்னும் நாடு திரும்பமுடியவில்லை. அதற்குள் மேலும் 21 மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சமாகும்!

இப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கரோனா தாக்கும் ஆபத்து உள்ளது. அதனால், அவர்களை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யவும், இலங்கையிடம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT