புதுச்சேரி: புதுச்சேரியில் 4ஜி, 5ஜி சேவைகளை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் முன்பு செல்ஃபி எடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு இன்று "செல்ஃபி வித் பிஎஸ்என்எல்" என்ற நூதனப் போராட்டம் நடைபெற்றது. தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவையைத் தர வேண்டும், வாங்கிய கடனைச் செலுத்தாமல் விட்ட தனியார் நிறுவனங்களுக்கு மீண்டும் கடன் தரும் மத்திய அரசானது, பிஎஸ்என்எல் வங்கிக் கடனுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியதுடன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்திற்கு புதுச்சேரி தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மேலும் வாலிபர் சங்க நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி, கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும், போராட்டத்தில் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்ஃபி எடுத்து தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.