புதுச்சேரி : ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில், புதுச்சேரியில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (டிச. 5) வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'புதுச்சேரி மாநிலத்தில் 2,727 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 50 பேர், காரைக்காலில் 13 பேர், மாஹேவில் 10 பேர் என மொத்தம் 73 பேருக்கு (2.68 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 59 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 219 பேரும் என மொத்தமாக 278 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், உயிரிழப்பு இல்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,881 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் இருக்கிறது. புதிதாக 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 533 (98.34 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 14 லட்சத்து 15 ஆயிரத்து 406 (2 டோஸ் உட்பட) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.