புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
புதுச்சேரி வில்லியனூரில் புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகம் இரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அதன் அனைத்து கோபுரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் ஏராளமான சன்னதிகள் உள்ளன. சோழர் காலக் கட்டிடக் கலையுடையது.
இந்தக் கோயிலில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. கோயிலின் உட்புற வளாகம், பக்தர்கள் நிற்குமிடம், அம்மன் சன்னதி, திருக்காமீஸ்வரர் சன்னதி என அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
கோயில் வளாகத்தில் தேங்கும் மழை நீரைக் கோயில் குளத்திற்குள் அனுப்ப மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் மழை நீர் வீணாகாமல் குளத்தின் வழியே நிலத்தடிக்குள் சென்றது. ஆனால், புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்வதால் குளம் நிரம்பி அதன் நீர் கோயிலைச் சூழ்ந்நுள்ளது.
2005-ம் ஆண்டிற்குப் பிறகு திருக்காமீஸ்வரர் கோயிலுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் கோயிலுக்குள் தேங்கியுள்ள மழை நீரை அகற்றப் பொதுப்பணித் துறைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.