ஒரு நிமிட வாசிப்பு

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

விழுப்புரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, நீலகிரி, மதுரை, சேலம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT