ஒரு நிமிட வாசிப்பு

தமிழில் கல்வி உதவித்தொகை தேர்வு வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில்

செய்திப்பிரிவு

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் (தனிப் பொறுப்பு) அவர்களுக்கு கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா பற்றி (KVPY) சு.வெங்கடேசன் எம்.பி. 25/8/2021 அன்று எழுதி இருந்த கடிதத்திற்கு பதில் தந்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (KVPY) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை ( ரூ.80,000 இல் இருந்து ரூ.1,12,000) வழங்குவதற்கான ஆன்லைன் திறனறித் தேர்வு இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக மட்டுமே இருக்கும் என்கிற பாரபட்சம் அகற்றப்பட்டு மாநில மொழிகளிலும் தேர்வை நடத்துங்கள் என்று கேட்டு இருந்தேன். அறிவியல் முனைப்புக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு? தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்கள், விண்ணப்பக் கட்டணம் குறைக்கப்படுதல் ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தி இருந்தேன்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், இதுகுறித்துப் பரிசீலிக்கப்பட்டது எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் (W.P.(MD) No. 16064/ 2021) அரசின் நிலையை வாக்கு மூலமாக சென்னை, மதுரை அமர்வுகளில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசின் பதில் தமிழக மாணவர்களுக்கு நீதி தருவதாக இருக்கட்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT