புதுச்சேரியில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (அக்.3) வெளியிட்ட தகவல்:
’’புதுச்சேரி மாநிலத்தில் 4,237 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 16, காரைக்கால்- 9, மாஹே- 7 பேர் என மொத்தம் 32 பேருக்கு (0.76 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 103 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 606 பேரும் என 709 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், காரைக்கால் சேதிலால் நகரைச் சேர்ந்த 49 வயது ஆண், தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறந்தோரின் எண்ணிக்கை 1,841 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதிதாக 89 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்
இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 995 (97.98 சதவீதம்) ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 19 ஆயிரத்து 922 பேருக்கு (இரண்டு டோஸ் உட்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ’’
இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.