கே.ஆர்.விஜயன், மோஹனா தம்பதியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. கேரளாவில் டீக்கடை நடத்தும் இத்தம்பதி இதுவரை 25 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களின் பணியும் பயணமும் அவ்வளவு பிரபலம்.
டீக்கடையில் கடுமையாக உழைக்க வேண்டியது பின்னர் சேமித்த பணத்துடன் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டியது. இப்படியே பல நாடுகளைப் பார்த்துத் திரும்பிய இவர்களுக்கு கரோனா முட்டுக்கட்டை போட்டது.
கடைசியாக கடந்த 2019 நவம்பர் டிசம்பர் மாதங்களில் இவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சென்று வந்தனர். தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது சொந்தச் செலவில் இந்தத் தம்பதியை அனுப்பிவைத்தார்.
இந்நிலையில், இரண்டாண்டுகளாக இவர்களின் பயணம் தடைபட்டுவிட்டது. தற்போது கரோனா குறைந்து வருவதால் உலக நாடுகள் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன.
இதனால் விஜயன் தம்பதி இம்மாதம் ரஷ்யா செல்கின்றனர். அக்டோபர் 21 தொடங்கி அக்டோபர் 28 வரை இவர்கள் செல்கின்றனர்.
இது குறித்து மோகனா கூறும்போது, எங்களுக்கு ரஷ்யாவைப் பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் கனவு. கரோனா தொற்று எங்களின் விருப்பங்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இப்போது நாங்கள் ரஷ்யா பயணிக்கவிருக்கிறோம் என்றார்.
விஜயன், மோகனா தம்பதி இதுவரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில், இஸ்ரேல், ஜெர்மனி எனப் பல்வேறு நாடுகளையும் சுற்றிப் பார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.