வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, தினசரி பாதிப்பு சராசரியாக 1,600 என்ற அளவில் இருந்து வருகிறது. நேற்று (செப். 26) 1,694 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படுவதில்லை. இந்நிலையில், வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பீட்டர் அல்போன்ஸ் இன்று (செப். 27) தன் ட்விட்டர் பக்கத்தில், "முதல்வரின் பெருமுயற்சி மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் கடுமையான உழைப்பின் காரணமாக, கரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட முதல்வரைக் கேட்டுள்ளேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.