ஒரு நிமிட வாசிப்பு

கேரள இளம் பெண் விஸ்மயா வழக்கு: கணவர் கிரண் குமார் அரசுப் பணியிலிருந்து நீக்கம்

செய்திப்பிரிவு

கேரள இளம் பெண் விஸ்மயா வரதட்சனை கொடுமை வழக்கில் அவரது கணவர் கிரண் குமார் அரசு வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ கூறுகையில், கிரண் குமார் மீது போக்குவரத்துத் துறை விசாரணை மேற்கொண்டிருந்தது. 45 நாட்கள் விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்தது.

விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், விசாரணையின் படி கிரண் குமார் துறையின் சட்ட திட்டங்களை மீறியுள்ளது உறுதியானதால் அவரை பணி நீக்கம் செய்வதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், மேட்ரிமோனியல் தளம் மூலம் மாப்பிள்ளை தேடி திருமணம் செய்துகொண்டவர் விஸ்மயா. 22 வயதான இவர் இறுதியாண்டு ஆயுர்வேத மருத்துவப் படிப்பு படித்து வந்தார்.

வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான இவர் ஜூன் 21ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட கார் பிடிக்காத காரணத்தால் தனது கணவர் தன்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, தனக்குக் காயம் ஏற்படுத்திய புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து கிரண் குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை அரசுப் பணியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT