கரூர் மாவட்டத்தில் ஆக.1-ம் தேதி தொடங்கி, வரும் 7-ம் தேதி வரை கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக கரூர் மாவட்டத்தில் 3.25 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள் அச்சிடப்பட்ட பவுச் (பிளாஸ்டிக் உறை) வழங்கப்படுகிறது.
கரூர் தாந்தோணி மலையில் உள்ள ரேஷன் கடையில் இன்று (ஆக. 4-ம் தேதி) ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள் அச்சிடப்பட்ட பவுச் வழங்குவதை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா விழிப்புணர்வு பவுச்களை வழங்கினார்.
பவுச்சில் கரோனா இல்லா கரூர், முகக்கவசம், கை கழுவுதல், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகிய வாசகங்கள், கரோனா வைரஸின் படம், 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.