சிங்கம்புணரி அருகே கானப்பட்டியில் மகசூலை அதிகரிக்க நிலக்கடலை செடியில் டிரம்மை உருட்டும் விவசாயி. 
ஒரு நிமிட வாசிப்பு

சிங்கம்புணரி அருகே நிலக்கடலை சாகுபடியில் நூதன முறையை கையாண்டு சாதித்து காட்டிய விவசாயி: ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே விவசாயி ஒருவர் நிலக்கடை சாகுபடியில் நூதன முறையைக் கையாண்டு ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல் எடுத்து சாதித்துக் காட்டியுள்ளார்.

சிங்கம்புணரி அருகே முசுண்டப்பட்டி ஊராட்சி கானப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி. இவர் நிலக்கடலை சாகுபடி செய்து வருகிறார். ஏக்கருக்கு 650 கிலோ நிலக்கடலை கிடைத்து வந்தது. மேலும் மகசூலை அதிகரிக்க முடிவு செய்தார்.

இதற்காக நிலக்கடலை செடிகள் பூ, பூக்க தொடங்கியதும் 200 லிட்டர் டிரமில் மணல் மூட்டைகளை வைத்து செடியை அமுக்கும் வகையில் நான்கு திசைகளிலும் உருட்டியுள்ளார். இதனால் செடிகள் நன்கு மண்ணில் அமுங்கி விழுதுகள் அதிகரித்து, மகசூலும் அதிகரித்தது. இதன்மூலம் ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல் எடுத்து சாதித்து காட்டியுள்ளார்.

இதுகுறித்து விவசாயி வெள்ளைச்சாமி கூறியதாவது: நிலக்கடலையில் 105 நாட்களில் மகசூல் எடுக்கலாம். நிலக்கடலையில் விழுதுகள் அதிகரித்தால் தான் மகசூல் அதிகரிக்கும். டிரமில் மண் மூடைகளை வைத்து உருட்டும்போது செடிகள் முழுவதும் மண்ணுக்குள் அமுங்கிவிடும். இதனால் விழுதுகள் அதிகரித்து காய்ப்பு அதிகரிக்கும். இது செலவில்லாத எளிய முறை. ஆனால் பலனோ அதிகம்.

ஏற்கனவே நான் ஒன்றரை ஏக்கரில் இதே முறையில் சாகுபடி செய்தேன். 1,450 கிலோ நிலக்கடலை கிடைத்தது. தற்போது ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன், என்றார்.

SCROLL FOR NEXT