காளையார்கோவில் அருகே வடக்குமாரந்தையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராமமக்கள். 
ஒரு நிமிட வாசிப்பு

இருபது ஆண்டுகள் போராட்டத்தால் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து: ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 20 ஆண்டுகள் போராட்டத்தின் பலனாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து கிராமமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

காளையார்கோவில் அருகே சூராணத்தை சுற்றி இலந்தக்கரை, கோடிக்கரை, கூத்தக்குடி, தவளிமண்டபம், வேளாங்குளம், சாத்திசேரி, மாரந்தை, கீராம்புளி, சிங்கனி, பாலையேந்தல், விளாங்காட்டூர், தோண்டியூர், வடக்கு மாரந்தை உட்பட 25 கிராமங்கள் உள்ளன. அப்பகுதி மக்களின் தொடர் வலியுறுத்தலை அடுத்து மதுரையில் இருந்து சூராணத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அந்தப் பேருந்து இரவு 9 மணிக்கே அப்பகுதிக்கு வரும். மேலும் அதிகாலை 5 மணிக்கு சென்றுவிடும். இதனால் அந்த பேருந்து அப்பகுதி மக்கள் பயன்படாதநிலை உள்ளது.

இதையடுத்து மாணவர்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பகல் நேரங்களில் பேருந்து இயக்க வேண்டுமென, 20 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்நிலையில் பகலில் இயங்கும் வகையில் சிவகங்கையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு அரசு பேருந்து விடப்பட்டுள்ளது.

இந்த பேருந்து சிவகங்கையில் இருந்து காளையார்கோவில், வேளாரேந்தல், இலந்தக்கரை, கோடிக்கரை, வடக்கு மாரந்தை, ஏரிவயல், சூராணம், சாலைக்கிராமம், செங்குடி வழியாக ஆர்.எஸ்.மங்கலம் செல்கிறது. இதனை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

இருபது ஆண்டுகள் போராட்டத்தின் பலனாக இயக்கப்பட்ட பேருந்திற்கு வடக்கு மாரந்தை கிராமமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் ஓட்டுநர், நடத்துநருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினர்.

காளையார்கோவில் அருகே வடக்குமாரந்தையில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற கிராமமக்கள்.

SCROLL FOR NEXT