சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கழிவறைக்காகத் தோண்டிய குழியில் பழமையான கருப்புநிற மண்குடுவை கண்டெடுக்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னழகு. இவர் தனது வீட்டின் அருகே கழிவறை கட்டுவதற்காகக் குழி தோண்டியுள்ளார். அப்போது 2 அடி ஆழத்தில் பழமையான மன்னர்கள் காலத்து கருப்பு நிற மண்குடுவை இருந்தது. இது அரை அடி உயரம் இருந்தது.
இதுகுறித்து பொன்னழகு உறவினர் திருநாவுக்கரசு வருவாய்த் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அங்கு வந்த வட்டாட்சியர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் சசிவர்ணம் மண் குடுவையைக் கைப்பற்றி சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் திருநாவுக்கரசு கூறுகையில், ''பழமையான குடுவையாக இருப்பதால் தொல்லியல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய்தால் மட்டுமே குடுவையின் காலம் போன்றவை தெரியவரும்'' என்றார்.
குடுவை கிடைத்துள்ள பகுதியில் மேலும் தொல்பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதியை அகழாய்வு நடத்த வேண்டுமெனத் தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.