முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டேங்குகளை அழிக்கும் ஏவுகணையை மத்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகமான (DRDO) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசாவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
மிகச்சிறிய அகச்சிவப்பு இமேஜிங் கருவியுடன் கூடிய இந்த ஏவுகணையை ஒரு தனி நபரே தூக்கிச் செல்லலாம் என்பது இதன் சிறப்பம்சம். இந்த ஏவுகணை இந்திய ராணுவத்துக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஆர்டிஓ தனது ட்விட்டர் பக்கத்தில், "லேசான எடை கொண்டது, தனிநபர் தூக்கிச் செல்லக்கூடியது. இந்த ஏவுகணையை செலுத்திவிட்டு காத்திருக்காமல் அடுத்த பணிக்கு ஆயத்தமாகலாம். இது துல்லியமாக இலக்கைத் தாக்கும்" என்று தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடியது. மேலும், இதன் அதிக தூர திறனும் ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்டு விட்டது.
புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்டேட் ஆஃப் ஆர்ட் ஆயுதங்களின் பட்டியலில் இந்த 'ஆண்ட்டி டேங்' ஏவுகணையும் இணைந்துள்ளது.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததற்கு டிஆர்டிஓ மற்றும் தொழில்துறையினருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.