மத்திய சீனாவில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “சீனாவின் மத்தியப் பகுதி மாகாணங்களாக ஹினான் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
ரயில்வே தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ராணுவ வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகி உள்ளனர். வெள்ள நீரில் கார்கள் மிதக்கின்றன” என்று செய்தி வெளியாகியுள்ளது.
60 வருடங்களுக்குப் பிறகு சீனாவின் மத்தியப் பகுதி இம்மாதிரியான வெள்ளப் பெருக்கைச் சந்தித்துள்ளதாக வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நிலைமை மோசமாக உள்ளது என்று வெள்ள நிலவரம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் காரணமாக இம்மாதிரியான மழைப்போக்கை உலக நாடுகள் எதிர்கொண்டு வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, காலநிலை மாற்றத்தால் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க உலகத் தலைவர்கள் இப்போதிலிருந்தே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.