செஞ்சிலுவை சங்க முத்திரையை தவறாக பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்க பொதுச் செயலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மதுரை மாவட்ட கிளை ஆலோசனைக் கூட்டத்தில் செஞ்சிலுவை சங்க முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. தன்னார்வ தொண்டர்கள் பலர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களாக உள்ளனர்.
பேரிடர் காலத்திலும், சேவை பணியின் போதும் மட்டுமே செஞ்சிலுவை சங்க முத்திரையை பயன்படுத்த வேண்டும். வேறு நிகழ்வுகளில் செஞ்சிலுவை சங்க முத்திரை மற்றும் விதிமுறைகளை பயன்படுத்தக்கூடாது.
இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.