ஒரு நிமிட வாசிப்பு

கோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சூடமேற்றி ஆர்ப்பாட்டம்

ஜெ.ஞானசேகர்

கோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் இன்று மலைக்கோட்டை கோயில் முன் சூடமேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு செயல்பாடுகளுக்கு அரசு தடை விதித்திருந்த நிலையில், கட்டுப்பாடுகள் தளர்வையொட்டி டாஸ்மாக் உட்பட பல்வேறு வகையான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கோயில்களில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பக்தர்கள் வழிபாடு நடத்தும் வகையில் அனைத்துக் கோயில்களையும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மாணிக்க விநாயகர் கோயில் முன் இந்து மக்கள் கட்சியினர் இன்று 1 கிலோ கற்பூரத்தை ஏற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, கோயில்களைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைப்பின் மாநிலச் செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாநில துணைத் தலைவர் மாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து ஸ்ரீராம் கூறும்போது, "டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துள்ள நிலையில், கோயில்களையும் திறக்க வேண்டும். கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பூசாரிகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT