அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 அடி உயரமுள்ள பெருமாள் சிலை இன்று கண்டெடுக்கப்பட்டது.
திருமானூர் அருகேயுள்ள கரையான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஏலாக்குறிச்சியில் வாகனங்கள் கழுவும் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ளார். தனக்குச் சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த 2 இரண்டு தினங்களாக ஆட்கள் கொண்டு அஸ்திவாரம் தோண்டி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ஒரு இடத்தில் 4 அடி தோண்டியபோது கற்சிலை போன்று தென்பட்டதையடுத்து அதனை மேலே எடுக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் முற்பட்டனர். இருட்டு சூழ்ந்ததால் முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சிலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு வருவாய்த் துறையினர் முன்னிலையில் வெளியே எடுத்தனர்.
வெளியே எடுத்தபிறகு சிலையைச் சுத்தம் செய்தனர். பின்பு அது பெருமாள் சிலை என்பதும், கல்லால் ஆன 8 அடி உயரம் கொண்டது என்பதும் தெரியவந்தது. அப்போது கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா எனக் கூறி இறைவனை வழிபட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிலையைச் சுத்தம் செய்து மாலையிட்டு தீபாராதனை காட்டினர்.
மேலும், சிலையானது முழுமையாக மேலே எடுக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலையிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. இச்சிலை திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் ஆராய்ச்சிக்குப் பின்னரே சிலை எந்தக் காலத்தை ஒட்டியது என்பது குறித்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.