ஒரு நிமிட வாசிப்பு

நெல்லை, தென்காசியில் 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணத் தொகை விநியோகம்

அ.அருள்தாசன்

நெல்லை, தென்காசியில் 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணத் தொகை விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையிலும் பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் இம்மாதம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 நிவாரணத் தொகையை முதல் தவணையாக வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள் 796 நியாய விலைக்கடைகள் மூலமாக இத்தொகை வழங்கப்படவுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதைத் தவிர்க்க நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகள் வீதம் நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது.

நிவாரண தொகை வழங்கும் நாள், நேரம் போன்ற விபரங்களை குறிப்பிட்டு வீடு தோறும் சென்று நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அவர்களது டோக்கனில் குறிப்பட்ட தேதியில் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளுக்கு சென்று நிவாரண உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

நிவாரண உதவித் தொகை வரும் 15-ம் தேதி முதல் மின்னணு குடும்ப அட்டைகள் மூலம் வழங்கப்படும். நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டதும் அவர்களது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பபடும் என்று தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் 658 நியாயவிலை கடைகளில் 4,40,846 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையான ரூ.2,000 நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது.

வரும் 15-ம் தேதி முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நியாய விலைக்கடைகளில் உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT