சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமியை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி ஆசி பெற்றார்.
காரைக்குடியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.ஆர்.ராமசாமி. இந்நிலையில் அவர் இந்தத் தேர்தலில் தனது மகன் கருமாணிக்கத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியைக் கேட்டதால், காரைக்குடியில் நிற்க விரும்பவில்லை.
இதையடுத்து காரைக்குடி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆதரவாளரான முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடியும், சிட்டிங் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி ஆதரவாளரான தேவகோட்டை முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமியும் சீட் கேட்டனர்.
இதற்கிடையில் தேவகோட்டையில் நடந்த காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வேலுச்சாமிக்கு சீட் கேட்டு அவரது ஆதரவாளர்கள் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டனர்.
ஆனால் கே.ஆர்.ராமசாமியின் மகனுக்கு சீட் கொடுத்ததால், அவரது ஆதரவாளரான வேலுச்சாமிக்கு சீட் மறுக்கப்பட்டு, வேட்பாளராக மாங்குடி அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து காரைக்குடியில் மாங்குடிக்கு காங்கிரஸார் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் கே.ஆர்.ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை. மேலும் பிரச்சாரத்திலும் பங்கேற்கவில்லை.
கண்ணங்குடி, தேவகோட்டை பகுதிகளில் கே.ஆர்.ராமசாமி ஆதரவின்றி வாக்குகளை பெறுவது சிரமம்.
இதனால் நேற்று கே.ஆர்.ராமசாமியை கண்ணங்குடி அருகே கப்பலூரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து மாங்குடி ஆசி பெற்றார். இதையடுத்து கண்ணங்குடி, தேவகோட்டை பகுதிகளில் காங்கிரஸ் உற்சாகமடைந்துள்ளனர்.