ஒரு நிமிட வாசிப்பு

முதலில் பொய் சொல்வதை நிறுத்துங்கள்: காங். நிர்வாகிகளுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பொய் சொல்வதை முதலில் நிறுத்துமாறு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சிவகங்கை தொகுதி எம்.பி, கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்றிரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களுக்குள் பொய்சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸ்காரர்கள் மேடையும், மைக்கும் கிடைத்துவிட்டாலே காமராஜர் ஆட்சி அமைப்போம், இந்தியாவை வல்லரசாக ஆக்குவோம் எனப் பேச ஆரம்பித்துவிடுகின்றனர். இதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. மேடையில் என்ன பேசினாலும் நிர்வாகிகள் தங்களுக்குள் உண்மையாக இருக்க வேண்டும்.

முதல்படியாக நமக்குள் பொய் பேசுவதை நிறுத்த வேண்டும். எப்போது நிர்வாகிகளிடம் நான் பேசினாலும், எல்லா இடங்களிலும் பூத் கமிட்டி அமைத்தாகிவிட்டது,

அனைத்து பூத்களிலும் ஆள் இருக்கின்றனர் என்பார்கள். ஆனால், காங்கிரஸுக்கு ஓட்டே வராத பூத்கள் கூட இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 70 லட்சம் உறுப்பினர்கள் எனப் பேசுவார்கள்.

அப்படியிருந்தால் நானே கூட முதல்வராகியிருக்கலாம். இதை நம்பி நானும் தேர்தலில் நின்றேன், ஆனால் எனக்கே யாரும் ஓட்டுப்போடவில்லை" என்றார்.

இந்தப் பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

SCROLL FOR NEXT