திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தசை சிதைவு நோயாளிகளுக்கான 2 நாள் இலவச மருத்துவ முகாம் இன்று தொடங்கியது.
இந்த முகாமை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து, நோயாளிகளுக்கான வழிகாட்டு கையேட்டை வெளியிட்டார்.
மருத்துவமனை வளாகத்தில் மத்திய விரிவுரை அரங்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் பங்கேற்கும் நோயாளிகளுக்கு எலும்பு அடர்த்தி, நுரையீரல் பரிசோதனை, நரம்பு சோதனை, இருதய பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
மேலும் 15 நாட்களுக்குத் தேவையான மாத்திரைகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. தசை இறுக்கத்தைக் குறைக்கும் டேப்பிங் செய்யப்படுகிறது.
மூச்சுப்பயிற்சி மற்றும் தசை இறுக்கத்தை குறைக்கும் செயல்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
முகாமை தொடங்கி வைத்த மருத்துவ கல்லூரி முதல்வர் தசை சிதைவு நோயாளிகளுக்காக சிறப்பு வெளிநோயாளிகள் பிரிவு ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த இலவச மருத்துவ முகாமை முடநீக்கியல் துறை பேராசிரியர் எம். மணிகண்டன், உடலியல் மற்றும் மறுவாழ்வியல்துறை இணை பேராசிரியர் பி. உதயசிங் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.