பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நில நடுக்கவியல் துறை தரப்பில், “ பிலிப்பைன்ஸில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
இதன் ஆழம் 15 கிலோமீட்டர் ஆகும் நில நடுக்க அதிர்வுகள் கடாபவன், கோரோடல் ஆகிய நகரங்களில் உணரப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பிலிப்பைன்ஸில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கமாக இது கருதப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிங் ஆஃப் ஃபயர்
ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.