ஒரு நிமிட வாசிப்பு

சிறப்பு நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள செல்லும் நெல்லையப்பர் கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை

அ.அருள்தாசன்

கோவை மாவட்டம் தேக்கப்பட்டியில் நடைபெற இருக்கும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள அழைத்து செல்லப்படவுள்ள திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியிலுள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் ஆண்டுதோறும் கோயில் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டுக்கான முகாம் வரும் 8-ம் தேதி தொடங்கி 48 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கும், அவற்றுடன் செல்லும் பாகன்கள், பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் உள்ள காந்திமதி யானைக்கு ஆர்டிபிசிஆர் எனப்படும் கரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலியிலுள்ள தனியார் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் காந்திமதி யானையின் தொண்டை பகுதியில் இருந்தும், தும்பிக்கையிலிருந்தும் சளி மாதிரிகளை சேகரித்து சென்றனர்.

இதுபோல் யானை பாகன்கள் ராம்தாஸ், விஜயகுமார் மற்றும் யானையுடன் செல்லவுள்ள 3 பணியாளர்களுக்கும் திருநெல்வேலி பாட்டப்பத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று தெரியவரும்.

காந்திமதி யானை நலவாழ்வு முகாமுக்கு இன்று லாரியில் அழைத்து செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருநெல்வேலி மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காந்திமதிக்கு லாரியில் ஏறுவதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT