என் பெயர் சந்துரு. நான் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்து முடித்துள்ளேன். நான் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போது நம் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ SCOUT (Scholars for Outstanding Undergraduate Talent in Tamil Nadu) திட்டத்தின் மூலம் தென் கொரியாவில் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
என் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவபுரம். அங்கு என் அப்பா, அம்மா இருவரும் விவசாயம் செய்கிறார்கள். என் குடும்பத்தில் யாரும் இதுவரை விமானப் பயணம் செய்ததில்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் எனக்கு அந்த முதல் விமானப் பயண அனுபவம் கிடைத்தது. அது என் வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணம்.
தென் கொரியாவின் பூசன் பல்கலைக்கழகத்தில் Advanced Sustainable Energy Laboratory-யில் திறன் பயிற்சி பெற்று, Solar Cell தயாரிப்பு மற்றும் Fibre Fabrication போன்ற மிகவும் மேம்பட்ட ஆய்வுகளில் நேரடியாக கலந்து கொண்டேன். நான் தென் கொரியாவில் உள்ள MEMS (Micro-Electro-Mechanical Systems) ஆய்வகத்தில் நேரடியாக பயிற்சி பெறும் வாய்ப்பு பெற்றேன்.
அங்கு படிக்கும் மாணவர்களுக்குக் கூட உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதி கிடைக்காது. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து வந்த மாணவர்களாகிய எங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த ஆய்வகத்தில் முன்னணி விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கற்றுக்கொள்வது, ஆய்வுகளை நேரடியாக அனுபவிப்பது என எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டின் மாணவராக இந்த வாய்ப்பு கிடைத்தது என் வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனையாக உணர்கிறேன்.
மேலும், எனது மேற்படிப்பைத் தென் கொரியாவிலேயே தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நான் முதல்வன் SCOUT திட்டம் மூலம் என் கனவு மட்டும் நிறைவேறவில்லை, என் வாழ்க்கை பாதையை மாற்றி இருக்கிறது. என்னை போன்ற கடைக்கோடி கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.
இந்த அரிய வாய்ப்பை அளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும், நான் முதல்வன் திட்டம் பற்றி அறிந்துக்கொள்ள நாட வேண்டிய இணையதளம்: https://www.naanmudhalvan.tn.gov.in