சென்னை: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி) வழங்கும் ‘இந்து தமிழ் திசை - நாளைய விஞ்ஞானி 2023’ என்ற மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்வு மண்டல வாரியாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை மண்டல ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு இன்று (ஜன. 6) காலை10 மணிக்கு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி சென்னை வளாகத்தில் நடைபெறுகிறது.
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் அறிவியல் திறனை வெளிக்கொண்டு வரும் வகையிலும் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்க, திருச்சி மண்டலத்தை சேர்ந்த 210-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஆன்லைனில் பதிவு செய்திருந்தன.
இதற்கிடையே, சென்னை மண்டல அளவிலான ஆய்வுகளைச் சமர்ப்பிக்கும் நிகழ்வை இன்று காலை 10 மணிக்கு பொது நூலகத் துறை இயக்குநர் கே.இளம்பகவத் தொடங்கிவைக்கிறார், மாலை 4.30மணிக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) சிவிஆர்டிஇ பிரிவு(Combat Vehicles Research and Development Establishment) முன்னாள் இயக்குநர் வி.பாலமுருகன் பங்கேற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வான மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுகிறார்.
விஐடி சென்னையின் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் இந்நிகழ்வில் பங்கேற்கிறார். இந்த அறிவியல் திருவிழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எல்லையில்லா பொறியாளர்கள் – இந்தியா (பெங்களூரு பிரிவு) ஆகியவை இணைந்துள்ளன.