வலைஞர் பக்கம்

ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள் | மேற்கோள்கள் 10 - வாழ்க்கை வேடிக்கையானதாக இல்லையெனில், துன்பம் மிகுந்திருக்கும்

செய்திப்பிரிவு

ஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக அறிவாற்றல் கொண்டவர் என புகழப்படும் இயற்பியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள் இன்று (ஜனவரி 8). கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும் அதீத ஈடுபாடு கொண்டிருந்தவர், அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகியன இவரது முக்கிய ஆய்வுத்துறைகள். தனது இளம்வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானார். பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு. இவர் உதிர்த்த சில முத்துகள் இதோ...

> "கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள், மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள்."

> "எப்படியாயினும் கடினமான வாழ்க்கை உருவாகலாம், அங்கு எப்போதும் உங்களால் செயல்பட மற்றும் வெற்றிபெற முடிந்த ஏதாவது இருக்கும்."

> "நமது பேராசை மற்றும் மூடத்தனத்தின் மூலம் நாம் நம்மை அழித்துக்கொள்ளும் அபாயத்தில் இருக்கிறோம்."

> "நாம் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்த பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்புவது இயற்கையானதே."

> "நமது நடவடிக்கையின் உயரிய மதிப்பினை நாம் தேடிப்பெற வேண்டும்."

> "அமைதியான மக்கள் சத்தமான மனதைக் கொண்டிருக்கிறார்கள்."

> "மனித முயற்சிக்கு எவ்வித எல்லைகளும் இருக்கக்கூடாது."

> "நீங்கள் எப்போதும் கோபமாகவோ அல்லது குறை கூறிக்கொண்டோ இருந்தால், உங்களுக்கான நேரம் மற்றவர்களிடம் இருக்காது."

> "உழைப்பு உங்களுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கின்றது. உழைப்பு இல்லாத வாழ்க்கை வெறுமையானது."

> "வாழ்க்கை வேடிக்கையானதாக இல்லாமல் இருந்தால் துன்பம் நிறைந்ததாக இருக்கும்."

மனித குலம் நீடிப்பதற்கு விண்வெளி ஆராய்ச்சி மிகவும் முக்கியம் என்றார் ஹாக்கிங். “உலகளாவிய அணு ஆயுதப் போர், மரபணுத் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட வைரஸ், இன்னும் நாம் கற்பனையே செய்திராத ஆபத்துகள் போன்றவற்றால் ஏற்படும் பேரழிவால் பூமியில் உயிர்வாழ்க்கைத் துடைத்தழிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று ஹாக்கிங் 2007-ல் கூறினார்.

கடவுளையும் மதத்தையும் பற்றி ஹாக்கிங் கூறியவை பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பிவிட்டன. பிரபஞ்சத்தின் உருவாக்கத்தைப் பற்றி விளக்குவதற்கு இந்தப் பிரபஞ்சத்தின் வெளியில் உள்ள, கடவுள் போன்ற எதன் உதவியையும் நாட வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஹாக்கிங்.

‘எதைப் பற்றி நீங்கள் அதிகம் நினைத்துக்கொண்டிருப்பீர்கள்?’ என்று ‘நியூ சயன்டிஸ்ட்’ இதழ் ஒருமுறை ஹாக்கிங்கிடம் கேட்டது. “பெண்கள். அவர்கள்தான் எனக்குப் பெரிய புதிர்!” என்று பதிலளித்தார் ஹாக்கிங். | விரிவாக வாசிக்க > ஸ்டீபன் ஹாக்கிங்: காலத்தில் கலந்த காலம்!

SCROLL FOR NEXT