வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 13: சுகாசனம்

செய்திப்பிரிவு

பதினெண் சித்தர்களில் ஒருவர் பதஞ்சலி. இவர் தொகுத்தளித்த ‘பதஞ்சலி யோக சூத்திரம்’ நூல்தான் யோகக் கலைக்கு அடிப்படை. ‘‘ஸ்திர சுகம் ஆசனம்’’ என்பார்பதஞ்சலி. எந்த நிலையில் உறுதியாகவும், சிரமமின்றியும் இருக்க முடிகிறதோ, அதுவே ஆசனம். அதாவது, ஆசனம் செய்கிறேன் பேர்வழி என்று உடம்பை ஒரேயடியாக வருத்திக்கொள்ளக் கூடாது.

‘சாதாரணமாக சம்மணக்கால் போட்டு உட்கார்வதே ஒரு ஆசனம். அதன் பெயர் சுகாசனம்’ என்று முதல் நாளில் பார்த்தோம். அதை இப்போது பார்க்கலாம். (வெந்நீர் போடுவதற்கு எதற்கு ரெசிபி என்கிறீர்களா?)

கால்களை நீட்டி நிமிர்ந்து உட்காரவும். கால்களை மடித்து சம்மணக்கால் போட்டு அமரவும். கைகளை ரிலாக்ஸாக தொடை மீது வைத்துக் கொள்ளவும். கை கட்டைவிரல் ஆள்காட்டி விரல் நுனிகளை மட்டும் சேர்த்து மற்ற விரல்களை நீட்டி வைத்துக் கொள்ளவும். இதன் பெயர் சின்முத்திரை. உள்ளங்கையை கீழ்நோக்கி ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளலாம். தலை, கழுத்து, முதுகு நேராக, அதே நேரம் ரிலாக்ஸாக இருக்கட்டும். கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூச்சை நிதானமாக இழுத்து, விடுங்கள்.

கால் முட்டிகள் இயன்ற வரை தரையை ஒட்டியிருந்தாலோ, தரையில் பதிந்திருந்தாலோ வெகு நேரத்துக்கு சிரமமின்றி இந்த ஆசனத்தில் அமரமுடியும். பதஞ்சலி சொன்னதுபோல, சுகமாக, ஸ்திரமாக, அசைவின்றி உட்கார முயற்சியுங்கள். உடம்பு ரிலாக்ஸ் ஆவதோடு, சுவாசம், எண்ண ஓட்டம் சீராகும். மனம் ஒருமுகப்படும்.

நாளை – ஏலேலோ…….!

SCROLL FOR NEXT