போக்குவரத்து நெரிசலும் வாகனங்களை ஓரிடத்தில் நிறுத்துவதும் உலகளவில் மிகப்பெரிய சிக்கலாக இருந்துவருகின்றன.
அதிலும் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களிலும் வாகனங்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்படுகின்றன.
இதனை முதன்முதலில் சீர்செய்ய பிப்ரவரி 5, 1958-ல் பிரிட்டிஷ் அரசு லண்டனில் உள்ள மேஃபேர் வீதியில் ஒரு சோதனை முயற்சியை அறிமுகப்படுத்தியது.
மீட்டர் பொருத்தப்பட்ட கம்பங்கள் வீதி நெடுக நடப்பட்டன. வாகனத்தை எத்தனை மணி நேரம் நிறுத்த விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றார்போல மீட்டரில் நாணயங்கள் செலுத்த வேண்டும்.
உடனடியாக மீட்டர் கடிகாரம் ஓடத் தொடங்கும். குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தும் வாகனம் அகற்றப்படவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டும்.
இந்தப் புதிய முறை அமலானதும் லண்டன் வாகன ஓட்டிகள் மீட்டர் இல்லாத தெருக்களைத் தேட ஆரம்பித்தனர். விளைவு, வீதியோரம் மீட்டர்கள் நடப்பட்டன. வண்டி ஓடும்போது மீட்டர் போடுவது தெரியும்… நிறுத்த மீட்டர் போடுவது தெரியுமா?