தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படங்கள் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஏ.கே. செட்டியார்.
காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் 1911 நவம்பர் 3-ல் பிறந்தவர். காந்தியின் மீது அளப்பரிய பக்தி கொண்டவர். பின்னாட்களில் ‘மகாத்மா காந்தி ட்வென்டீத் செஞ்சுரி ப்ரோஃபெட்’ எனும் பெயரில் காந்தியைப் பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்தார்.
டோக்கியோ இம்பீரியல் போட்டோகிராஃபி கல்லூரி, நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் போட்டோகிராபி ஆகிய கல்லூரிகளில் ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தைக் கற்றவர் இவர்.
1943-ல் தொடங்கி 40 ஆண்டுகள், ‘குமரி மலர்’ எனும் இதழை நடத்தினார். காந்தி பற்றிய ஆவணப்பட தயாரிப்பின்போது கிடைத்த அனுபவங்களை ‘குமரி மலர்’ இதழில் தொடராக எழுதினார்.
அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ எனும் நூலாக வெளியானது. தனது 20-வது வயதிலேயே மியான்மரில் ‘தனவணிகன்’ எனும் இதழைத் தொடங்கிய பெருமை இவருக்கு உண்டு.