1990-களுக்குப் பின்னர் உலகம் முழுவதிலும் மதச்சார்பின்மை விழுமியங்கள் சரிவதை வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
2005-ல் வெளிவந்த ‘செக்குலரிஸம் அட் தி பே: உஸ்பெகிஸ்தான் அட் தி டர்ன் ஆஃப் தி செஞ்சுரி’ எனும் நூல் இதுதொடர்பாக விரிவாகப் பேசியது.
இந்நூலை எழுதியவர் வரலாற்றாய்வாளரும் பேராசிரியருமான வருண் தேவ். 1932 அக்டோபர் 30-ல் பிறந்த இவர், ஆக்ராவில் ஆரம்பக் கல்வி பயின்றவர். இவரது தந்தை கொல்கத்தாவுக்கு மாற்றலான பின்னர் பள்ளி, கல்லூரி படிப்பு அங்கு தொடர்ந்தது.
இளங்கலை வரலாறு முடித்த அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வரலாற்றை விருப்பு வெறுப்பற்ற பார்வையில் அணுகியவர் என்று போற்றப்படும் இவர் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டு வரலாறு குறித்து பல கட்டுரைகளை எழுதியவர்.
சமூக அறிவியல் மையத்தை நிறுவியதுடன் அதன் இயக்குநராக 1973 முதல் 1983 வரை பணியாற்றியவர். மவுலானா ஆஸாத் ஆசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். 2013 ஜூலை 16-ல் காலமானார்.