மதுரையில் 2 நாட்களாக குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் தவித்த தெரு நாயை பொதுமக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
கருணையுள்ள கொண்ட சிலர் நாயை மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர்கள், நாயின் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த குட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து அந்தத் தெருநாயின் உயிரைக் காப்பாற்றினர்.
மதுரை வளர்நகர் பகுதியில் கர்ப்பமான நாய் ஒன்று குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் சிரமப்பட்டுத் திரிந்தது. நாயின் வேதனையைக் கண்டு கருணையுள்ளம் கொண்ட சிலர் அதனை மீட்டு மதுரை செல்லூர் மாநகராட்சி தெருநாய் கருத்தடை கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, டாக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், தெருநாயைப் பரிசோதனை செய்தனர். அதில், நாயின் வயிற்றில் 8 குட்டிகள் இருந்ததும், அதில் 4 குட்டிகள் இறந்துவிட்டதால் குட்டிப்போட முடியாமல் தவித்ததும் தெரியவந்து.
மருத்துவர்கள் உடனே, அறுவை சிகிச்சை செய்து, நாயின் வயிற்றில் இறந்த 4 குட்டிகளை வெளியே எடுத்தனர். அதன்பிறகு உயிருடன் இருந்த மற்ற 4 குட்டிகளையும் எடுத்து, அந்த குட்டிகளையும், தாய் நாயையும் காப்பாற்றினர்.
பொதுமக்கள் கருணையால் 2 நாட்களாக தவித்த தெருநாய் காப்பாற்றப்பட்டதோடு, அதன் வயிற்றில் இறக்காமல் மற்ற குட்டிகளும் காப்பாற்றப்பட்டன.
இது கால்நடை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் கூறுகையில், ‘‘பொதுவாக மாடுகளுக்கும் இந்தப் பிரச்சனை வரும். மாடுகளைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள உரிமையாளர்கள் இருப்பார்கள். உடனே அதனை மருத்துவரிடம் அழைத்துச் செல்வர்.
ஆனால், தெருநாய்களுக்கு அப்படியில்லை. மனிதர்கள், அவற்றை பெரும்பாலும் தொந்தரவாகவே பார்க்கிறார்கள். அதிலும், இரக்கமுள்ள சிலர் இந்த நாய் பட்ட துயரத்தைப் பார்த்து இங்கு கொண்டு வந்து சேர்த்ததால் அதன் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.
ஒரு நாய் அதிகப்பட்சம் 10 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். உயிருக்குப் போராடிய இந்த நாயை பொறுத்தவரையில் வயிற்றில் இருந்த 8 குட்டிகளில் 4 இறந்துவிட்டதால் மீதமுள்ள குட்டிகள் வெளியே வர முடியாமல் நாய் உயிருக்குப்போராடியது, ’’ என்றார்.