வலைஞர் பக்கம்

செம்பை வைத்தியநாத பாகவதர் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

கர்னாடக இசை உலகில் 70 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் (Chembai Vaidhyanatha Baghavathar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

l கேரள மாநிலம் பாலக்காடு அருகே செம்பை என்ற கிராமத் தில் (1896) பிறந்தார். தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் அனைவரும் கர்னாடக இசைக் கலைஞர்கள். இசை இவரது குடும்ப பாரம்பரியமாகவே விளங்கி யது.

l தந்தையிடம் 3 வயதில் இசை கற்கத் தொடங்கினார். சகோதரர் சுப்பிரமணிய பாகவதருடன் ஒட்டப்பாலம் கிருஷ்ணன் கோயிலில் முதல் கச்சேரி 8 வயதில் அரங்கேறியது.

l தன் சகோதரருடன் சேர்ந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார். 1914-ல் இருவரும் சேர்ந்து ‘செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம்’ என்ற இசை விழாவைத் தொடங்கினர். ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த விழா இன்றுவரை தொடர்கிறது.

l ஹரிகதையில் புகழ்பெற்று விளங்கிய நடேச சாஸ்திரிகள், செம்பை சகோதரர்கள் பாடுவதைக் கேட்டு வியந்தார். அவர்களை தமிழகத்துக்கு அழைத்துவந்து, தான் ஹரிகதை நிகழ்த்தும் மேடைகளில் கதைச்சூழலுக்கு ஏற்ப அவர்களைப் பாடவைத்தார். இந்நிகழ்ச்சி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

l தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என தமிழகத்தின் பல இடங்களிலும் கச்சேரி நடத்தும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. பல சபாக்கள், இசை விழாக்களில் பாடினார். கிராமஃபோன் இசைத்தட்டுகளிலும் அவரது பாடல்கள் வெளியாயின.

l தனித்துவம் வாய்ந்த குரல் இனிமையால் வைத்தியநாத பாகவதரின் புகழ் மேன்மேலும் பரவியது. அதிக கச்சேரி வாய்ப்புகள் வந்ததால் 1945-ல் சென்னை சாந்தோமில் குடியேறினார். ‘குருவாயூர் ஏகாதசி’ நாளில் சீடர்களுடன் அங்கு கச்சேரி நடத்துவார். கம்பீரமான, கணீரென்ற குரல்வளம் படைத்த அவரது பாடல்கள் கேட்போரை மெய்மறக்க வைக்கும். ஒலிபெருக்கிகள் இல்லாத அக்காலத்தில் அவரது குரல் கடைசி வரிசையில் உள்ளவர்களுக்கும் கேட்கும்.

l வளரும் இளம் கலைஞர்களை உற்சாகப்படுத்துவார். சீடர்களுக்கு நம்பிக்கை கொடுத்து ஊக்குவிப்பார். பக்கவாத்தியக்காரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வார். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உரிய வாய்ப்பளிப்பார்.

l தொண்டையில் ஒருமுறை பிரச்சினை ஏற்பட்டு அவரால் பாடமுடியாமல் போனது. எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. குருவாயூரப்பன் சன்னதியில் மனமுருக வேண்ட, உடனடியாக பாடத் தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.

l கேரளாவிலும் தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான சீடர்கள் உண்டு. ஜெயன்-விஜயன் இரட்டையர், கே.ஜே.ஜேசுதாஸ், டி.வி.கோபாலகிருஷ்ணன், வி.வி.சுப்பிரமணியம், பி.லீலா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கர்னாடக இசை உலகில் ‘செம்பை’ என்று, தான் பிறந்த கிராமத்தின் பெயராலேயே அழைக்கப்படுகிறார். ‘காயன காந்தர்வ’, ‘சங்கீத கலாநிதி’, ‘பத்ம பூஷண்’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

l சங்கீத உலகில் அழியாப் புகழ்பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதர் 78-வது வயதில் (1974) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் விதமாக 1996-ல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் இசை விழா நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படும் கலைஞருக்கு ‘செம்பை விருது’ வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT