வலைஞர் பக்கம்

கிராமங்களில் நவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி இலவசமாக கிருமி நாசினி தெளிக்கும் மென்பொறியாளர்

இ.மணிகண்டன்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக கிராமங்களில் நவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி இலவசமாக கிருமி நாசினி தெளித்து வருகிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகே உள்ள மேலத்துலுக்கன்குளத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கிருஷ்ணகுமார் (36). பெங்களூருவில் பணியாற்றி வரும் இவர் தற்போது அலுவலகம் செயல்படாமல் உள்ளதால் தனது சொந்த கிராமத்தில் இருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் கரோனா தடைக்காலத்தில் தனியார் டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து 3000 விவசாயிகளுக்கு 7000 ஏக்கர் பரப்பளவை இலவசமாக உழவு செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தனது கிராம மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தென்கொரியா மற்றும் இந்தியாவில் பஞ்சாப், மகாராட்டிரா போன்ற மாநிலங்களில் திராட்சை தோட்டங்களில் மருந்து தெளிக்கப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரமான பன்முகத்திறன் கொண்ட டிராக்டர் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் அரசு கொடுக்கும் மருந்தை பயன்படுத்தி இலவசமாக ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளித்து வ௫கிறார்.

பேராலி, மல்லாங்கிணர், மேலத்துலுக்கன் குளம், கல்குறிச்சி என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளித்து வ௫கிறார் .

இது குறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், எங்கள் கிராமத்தில் கரோனா தொற்று இல்லை என்றாலும் வரும்முன் காப்போம் என்பதை போல் நவீன இயந்திரம் கொண்டு கிருமி நாசினி தெளித்து வருகிறேன்.

இதற்கு தனியார் டிராக்டர் நிறுவனம் உதவி செய்து வருகிறது. மருந்து தவிர மற்ற செலவுகளுக்கு நண்பர்கள் மூலம் பணம் திரட்டி இப்பணியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT