வலைஞர் பக்கம்

டைரி 2027: தீபகற்பம் என்றால் என்ன?

செய்திப்பிரிவு

இன்று 14.02.2027. சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சமத்து சம்புலிங்கம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் குறித்து இங்கே எழுதுகிறேன்:

அது சமத்து சம்புலிங்கம் அரைக்கால் சட்டை, முக்கால் கை மேல்சட்டைப் போட்டு படித்த பள்ளிக் காலத்தில் நிகழ்ந்த சம்பவம்.

ஆசிரியர் அன்று புவியியல் பாடம் நடத்த ஆரம்பித்தார். அதற்கு முன் நேற்று நடத்திய பாடப் பகுதியில் இருந்து வினாக்கள் எழுப்பி, மாணவர்கள் அன்றன்றையப் பாடத்தை படித்துள்ளனரா என அறிய விரும்பினார்.

எப்போதும் புவியியல் பாடம் நடத்தும்போது அதை குந்தாங் கூறாகக் குழப்பி விட்டுவிடும் சம்புலிங்கத்தை எழுப்பினார்.

“மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட நிலப் பகுதிக்கு என்ன பெயர்?” என்று கேட்டார்.

சம்புலிங்கம் எதையும் யோசிக்காமல் அடுத்த நொடியே சொன்னார், “சொகுசு பங்களா!”

“அடேய்! நேத்து படிச்சுப் படிச்சுச் சொன்னேனடா. மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட நிலப் பகுதி தீபகற்பம்னு!” என்று ஆசிரியர் கை நீட்ட ஓங்கியபோது, சமத்து சம்புலிங்கம் தன் கையில் இருந்த செய்தித்தாளை ஆசிரியர் முன் நீட்டினார்.

அதில் 2017-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த சொகுசு பங்களாவின் படம் மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டு இருந்தது!

SCROLL FOR NEXT