வலைஞர் பக்கம்

சாவித்ரிபாய் புலே 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

இந்தியாவின் முதல் ஆசிரியை, சீர்திருத்தவாதி

சமூக சீர்திருத்தவாதி, கவிஞர், இந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் புலே (Savitribai Phule) பிறந்த தினம் இன்று (ஜனவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

#

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் நைகான் என்ற சிற்றூரில் (1831) பிறந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த விவசாயக் குடும்பம் அது. 12 வயது ஜோதிராவ் புலேக்கும், 9 வயது சாவித்ரிபாய்க்கும் குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்டது.

# சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ், மனைவியையும் தனது போராட்டங்களில் இணைத்துக் கொண்டார். கணவரிடமே கல்வி கற்றார். ஒரு விதவைத் தாயின் பிள்ளையை தத்தெடுத்து வளர்த்தனர். கணவருடன் சேர்ந்து பல நலப்பணிகளில் ஈடுபட்டார்.

# பெண் கல்விக்காக முதல் பள்ளியை புனேவில் 1846-ல் நிறுவினர். அதில் ஆசிரியையாகப் பணியாற்றிய இவர், இந்தியாவின் முதல் ஆசிரியை என்ற பெருமை பெற்றார். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு கல்வி புகட்டினார். முறையாக ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்து, ஒரு பள்ளியைத் தொடங்கி அதன் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார்.

# இதற்கு பழமைவாதிகள், உயர்ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சேறு, சாணம், கற்கள், முட்டைகளை அவர் மீது வீசினர். ஆனாலும், மனம் தளராமல் கல்விப் பணியைத் தொடர்ந்தார். மேலும் 5 பள்ளிகளை தொடங்கினார்.

# கணவனை இழந்த பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகி கர்ப்பமாவது, பின்னர் சமூகத்துக்கு பயந்து சிசுக்களை கொல்வது, பெண்கள் தற்கொலை செய்துகொள்வது போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்தன. இதை தடுக்கும் நோக்கில் ‘பால் ஹத்யா பிரதிபந்தக் கிருஹா’ (சிசுக்கொலைத் தடுப்பு இல்லம்) ஒன்றை தொடங்கினார்.

# பெண் விடுதலை, சமூக அங்கீகாரம் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1852-ல் மஹிளா சேவா மண்டல் தொடங்கினார். கணவனை இழந்த பெண்களுக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடிப்பதைக் கண்டித்து 1863-ல் மாபெரும் போராட்டம் நடத்தினார். ‘இனி இவ்வாறு செய்யமாட்டோம்’ என்று முடிதிருத்துநர்களை உறுதியேற்கச் செய்தார்.

# கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துவைத்தார். பஞ்சம் ஏற்பட்டபோது, தம்பதியினர் இணைந்து அன்னசத்திரம் நடத்தினர். பஞ்சத்தின்போது பெற்றோரை இழந்த 52 குழந்தைகளுக்காக உறைவிடப் பள்ளி தொடங்கினர். தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடினார். கணவரின் மறைவுக்குப் பிறகும், சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.

# இவர் சிறந்த கவிஞரும்கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப் போக்கு இவரிடம் இருந்து தொடங்கியது என்று கூறப்படுகிறது. 1892-ல் கவிதை நூலை வெளியிட்டார். இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை என அனைத்து களங்களிலும் கவிதைகள் எழுதி தனிமுத்திரை பதித்தார்.

# 1897-ல் பிளேக் நோய் தாக்கியபோது, டாக்டரான தன் மகனைக் கொண்டு பிரத்யேகமாக ஒரு மருத்துவமனை தொடங்கச் செய்தார். பல குழந்தைகளை தன் கையால் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்தார்.

# தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை தூக்கி வந்ததால் அந்நோய் இவரையும் தாக்கியது. அவன் பிழைத்துக்கொள்ள, இவரது உயிர் பிரிந்தது. அப்போது இவருக்கு 66 வயது. இவரது நினைவாக மத்திய அரசு 1998-ல் தபால்தலை வெளியிட்டது.

SCROLL FOR NEXT