M.G.R. ரசிகர்களில் நடிகர்களும் பலர் உண்டு. அப்படிப்பட்ட ரசிகரான ஒரு நடிகர் காமெடி வேடங்களில் கலக்கியவர். பொதுவாக நகைச்சுவை நடிகர் என்றாலே அவர்கள் தோற்றமே சிரிப்பை வரவழைக்கும். ஆனால், நகைச்சுவை நடிகர்களிலேயே அழகான தோற்றம் கொண்டவர் அவர். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த அந்த நடிகர் தேங்காய் சீனிவாசன்!
எம்.ஜி.ஆர். மீது தீவிரமான அன்பு கொண்டவர் தேங்காய் சீனிவாசன். வெறிபிடித்த ரசிகர் என்றுகூட சொல்லலாம். ‘கல் மனம்’ என்ற நாடகத் தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் சீனிவாசன் என்ற இவரது பெயருக்கு முன்னால் ‘தேங்காய்’ சேர்ந்து கொண் டது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின், கட்சியிலும் சேர்ந்தார். எம்.ஜி.ஆருக்கும் தேங்காய் சீனிவாசன் மீது மிகுந்த அன்பு.
மனதில் எந்த களங்கமும் இல்லாமல் எல்லோரிடமும் வேடிக்கையும் விளையாட்டுமாக பழகு பவர் தேங்காய் சீனிவாசன். அவரது விளையாட்டு குணம் எம்.ஜி.ஆருக்கும் தெரியும். அதனால், தவறாக நினைக்க மாட்டார். அதேநேரம், அவரது உடல்நலம் குறித்தும் பொருளாதார நிலை குறித்தும் உரிமையுடன் கோபித்துக் கொள்வார்.
எம்.ஜி.ஆருடன் ‘கண்ணன் என் காதலன்’, ‘நம்நாடு’, ‘என் அண்ணன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக் குரல்’ உட்பட அவரது கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் தேங்காய் சீனி வாசன் நடித்துள்ளார். ‘நான் ஏன் பிறந் தேன்’ படத்தின் படப்பிடிப்பு சத்யா ஸ்டுடி யோவில் நடந்து கொண்டிருந்தது. ‘ரிக் ஷாக்காரன்’ படத்தை இயக்கிய எம்.கிருஷ்ணன், இந்தப் படத்தையும் இயக்கினார்.
ஒருநாள் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர். வருகைக்காக குழுவினர் காத்திருந்தனர். அப்போது, இயக்குநர் கிருஷ்ணனிடம் தேங்காய் சீனிவாசன் வேடிக்கையாக, ‘‘டைரக்டர் சார், ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் வாத்தியா ருக்கு (எம்.ஜி.ஆருக்கு) ‘அழகிய தமிழ் மகள் இவள்..’ பாடல் வெச்சது மாதிரி இந்த படத்தில் எனக்கும் ஒரு பாட்டு வெச் சுடுங்களேன்’ என்றார். சுற்றி இருந்தவர் களுக்கு அதிர்ச்சி. ‘என்ன இவர் இப்படி பேசுகிறாரே?’ என்று நினைத்தனர்.
படப்பிடிப்புக்கு எம்.ஜி.ஆர். வந்தார். அவர் காதுக்கு தேங்காய் சீனிவாசன் சொன்ன விஷயம் சென்றது. அவரை எம்.ஜி.ஆர். அழைத்தார். வேகமாக ஓடிவந்தார் தேங்காய் சீனிவாசன். அவ ரிடம், ‘‘உன் ஆசைப்படியே இந்தப் படத் தில் உனக்கு ஒரு பாட்டு வைச்சுடலாம்!’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். தேங்காய் சீனிவாசனுக்கு பயம் வந்துவிட்டது. ‘‘தலைவரே, நான் சும்மா விளையாட் டுக்கு சொன்னேன்’’ என்றார். அவரது தோளைத் தட்டி சிரித்தபடியே எம்.ஜி.ஆரும், ‘‘அட! நானும் விளை யாட்டுக்குத்தாம்பா சொன்னேன்’’ என்றதும் படப்பிடிப்பு தளமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.
தனக்கு நெருக்கமானவர்கள் தவ றான பழக்கங்களுக்கு அடிமையாகி உடலைக் கெடுத்துக் கொள்வதையோ, அநாவசியமாக செலவு செய்வதையோ எம்.ஜி.ஆர். அனுமதிக்க மாட்டார். ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட வர் நகைச்சுவை நடிகர் ஐசரி வேலன். ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது அவர் எம்.ஜி.ஆரிடம், ‘‘அண்ணே, எனக்கு சம்பளம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கச் சொல்லுங்க. குடும்ப செலவை சமாளிக்க முடியலை’’ என்றார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘வரும் சம்பளத் தில் குடும்ப செலவை சமாளிக்க முடி யலை என்று சொல்லாதே. இந்த வருடத் தில் நீ எத்தனை படங்களில் நடித்தாய்? அதற்கு மொத்தமாக எவ்வளவு சம்பளம் வாங்கினாய்? உன் குடும்பத்துக்கான செலவினங்கள் என்ன?’’ என்று கேட்டு அறிவுரை கூறினார். எம்.ஜி.ஆர். சொல் வதில் உள்ள நியாயத்தை ஐசரி வேலன் உணர்ந்து கொண்டார். இவரும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். பின்னர், அதிமுக எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். இணை அமைச்சர் அந்தஸ்துக்கு இணை யான ‘பார்லிமென்டரி செக்ரட்டரி’ பதவியி லும் ஐசரி வேலனை எம்.ஜி.ஆர். நியமித்தார்!
தேங்காய் சீனிவாசன் சொந்தமாக படம் எடுக்க ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆலோசித்தார். ‘‘சொந்தப் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேண் டாம்’’ என்று எம்.ஜி.ஆர். தடுத்தார். ஆனால், அதையும் மீறி படத் தயாரிப் பில் தேங்காய் சீனிவாசன் ஈடுபட்டார். அவர் கையில் இருந்த பணம் படப் பிடிப்பு செலவுகளுக்காக கரைந்துவிட் டது. பணமும் புரட்ட முடியவில்லை. மேற் கொண்டு என்ன செய்வதென்று தெரியா மல், ராமாவரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து நிலைமையைச் சொன்னார்.
‘‘நான்தான் ஆரம்பத்திலேயே சொன் னேனே, கேட்டியா? பட்டால்தான் புத்தி வரும். போ… போ…’’ என்று எம்.ஜி.ஆர். கோபமாகப் பேசி அவரை அனுப்பிவிட் டார். இருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்துபோன நிலையில், ஏமாற்ற மும் சோகமுமாய் நெடுநேரம் கழித்து இரவில் வீடு திரும்பினார். அங்கே தேங்காய் சீனிவாசனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தனது உதவியாளர்கள் மூலம் பெரும் தொகையை அவர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பியிருந் தார். விஷயம் அறிந்து, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கோரியதுடன், உதவிக்காக கண்களில் நீர்மல்க நன்றியும் தெரிவித்தார் தேங்காய் சீனிவாசன்!
‘நினைத்ததை முடிப்பவன்’ படத் தில், கிராமத்தில் இருந்து வரும் எம்.ஜி.ஆர்., தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள மற்றவரைப் போல நடிக்க வேண்டிய நிலை. அடுக்கு மாடி ஒன்றில் இருந்து கீழே பார்க்கும் எம்.ஜி.ஆர்., அங்கு சுக்கு காப்பி விற்றுக் கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனை மேலே அழைப்பார். படத்தில் இருவருக் கும் ஏற்கெனவே அறிமுகம். தனக்கு ஆரம் பத்தில் காசே வாங்காமல் சுக்கு காப்பி கொடுத்த தேங்காய் சீனிவாசனுக்கு 500 ரூபாய்க்கு காசோலை கொடுக்கு மாறு நடிகை லதாவிடம் சொல்வார் எம்.ஜி.ஆர்.! அப்போது அது பெரிய தொகை.
பணம் கிடைத்த மகிழ்ச்சியில் வியா பாரம் செய்யும் சுக்கு காபி வைத்திருக் கும் தூக்கை மறந்துவிட்டு செல்லும் தேங்காய் சீனிவாசனிடம், ‘‘பணம் வந்த தும் பழசை மறந்துட்ட பாத்தியா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்பார். தனது தவறை ஒப்புக்கொள்ளும் தேங்காய் சீனிவாசன், எம்.ஜி.ஆரிடம், ‘‘நீ கில்லாடி துரை. அடுக்குமாடிக்கு வந்தாலும் பழசை மறக் காம ஸ்டெடியா இருக்கே. இப்படியே இரு துரை’’ என்று வாழ்த்துவார்.
அப்படியேதான் இருந்தார் எம்.ஜி.ஆர்.!
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
‘பல்லாண்டு வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்ப் புத்தாண்டு தினம் வந்தது. படப்பிடிப்பு குழுவினருக்கு எம்.ஜி.ஆர். பரிசுகள் அளித்ததோடு, தேங்காய் சீனிவாசன் நடித்த ‘கலியுகக் கண்ணன்’ படத்தை திரையிட ஏற்பாடு செய்து குழுவினரோடு ரசித்துப் பார்த்தார். |
முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100