வலைஞர் பக்கம்

கி.வா.ஜகன்னாதன் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

தமிழ் அறிஞர், எழுத்தாளர்

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர், சொற்பொழிவாளர், சிலேடைப் பேச்சில் வல்லவரான கி.வா.ஜகன்னாதன் (Ki.Va.Jagannanthan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் (1906) பிறந்தார். சிறிது காலத்தில் குடும்பம் சேலம் அடுத்த மோகனூருக்கு குடியேறியது. அங்கிருந்த திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். வாங்கல், குளித்தலை பள்ளிகளில் கல்வியைத் தொடர்ந்தார்.

* கணிதமும், இயற்பியலும் இவருக்குப் பிடித்த பாடங்கள். இளம் வயதிலேயே திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர்அலங்காரம், கந்தர்அனுபூதி உள்ளிட்டவற்றை மனப்பாடமாகக் கூறுவார். எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிதம்பரம் நடராஜர் மீது ‘போற்றிப் பத்து’ என்ற பதிகத்தை 14-ம் வயதில் எழுதினார். முருகன் மீதும் பல பாடல்கள் எழுதினார்.

* பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது முடக்குவாதம் ஏற்பட்டதால் படிப்பு தடைபட்டது. இதனால் இலக்கியத்தின் மீது முழு கவனம் செலுத்தினார். ‘ஜோதி’ என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கவிதை கள் பிரபல இதழ்களில் வெளியாகின. காந்திஜியால் கவரப்பட்டவர், ராட்டையில் நூல் நூற்று கதர் ஆடைகளை அணிந்தார்.

* காந்தமலை முருகன் கோயில் திருவிழாவில் இவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு, அனைவரையும் கவர்ந்தது. சேந்தமங்கலம் சுயம்பிரகாச சுவாமிகள் இவரை அந்த ஊரிலேயே தங்கிப் பணியாற்றும்படி கூறினார். பஞ்சாயத்து அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றியபடியே, சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். ஆசிரமப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார்.

* சுவாமிகளின் ஆலோசனைப்படி, சென்னையில் உ.வே.சா.வுடன் தங்கி, குருகுல முறையில் தமிழ் பயின்றார். அவரது தமிழ்ப் பணிக்கு உதவுவதையே தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றார். அவரது அன்புக்குப் பாத்திரமாகி, அவரது உதவியாளராகவும் செயல்பட்டார்.

* இலக்கண, இலக்கிய, சங்ககால நூல்கள், காப்பியங்கள், பிரபந்தங்கள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். ‘வித்வான்’ தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறி திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றார். 1932-ல் கலைமகள் இலக்கிய இதழில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். தன் எழுத்தாற்றல், உழைப்பால் அதன் ஆசிரியராக உயர்ந்தார். இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தினார்.

* பேச்சாற்றல், சிலேடைப் பேச்சால் அனைவரையும் வசீகரித்தார். இவை பல நூல்களாகவும் வெளிவந்தன. நாடோடிப் பாடல்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். பல கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களைப் பாடச் சொல்லிக் கேட்டு, குறிப்பெடுத்தார். அவற்றைத் தொகுத்து, நூலாக வெளியிட்டார்.

* ஏற்றப் பாடல்கள், திருமணப் பாடல்கள், தமிழ்ப் பழமொழிகள், நாட்டுப்புறவியல் குறித்து ஆராய்ந்து எழுதிய மலையருவி உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமொழிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.

* சிறுகதைகளும் எழுதினார். திருக்குறள், திருவெம்பாவை, திருப்புகழ், பெரியபுராணம் நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். ஏராளமான பரிசுகள், விருதுகளைப் பெற்றார். இவரது ‘வீரர் உலகம்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

* வாகீச கலாநிதி, செந்தமிழ்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள் பெற்றார். திறனாய்வாளர், உரையாசிரியர், கவிஞர், பதிப்பாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கதாசிரியர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட கி.வா.ஜ. 82-வது வயதில் (1988) மறைந்தார்.

SCROLL FOR NEXT